போர் எதிரொலி: வெளிநாடுகளுக்கான தபால் சேவையில் கடும் இடையூறு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கப்பட்ட சில பொதிகளை இதுவரை அனுப்ப முடியாமல் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக சில பகுதிகளுக்கு அனுப்பப்படும் பொதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக தாமதங்களும் ஏற்படக்கூடும் என எச்சரித்தார்.குறிப்பாக அப்பிராந்தியத்திற்கான பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சர்வதேச தபால் சேவைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பொதிகள் அனுப்புவதிலும் பெற்றுக்கொள்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தாமதங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நாடுகளின் தபால் நிர்வாகங்களுடன் தொடர்ந்து தொடர்பு பேணப்பட்டு வருவதாகவும் கூறினார்.
நிலைமை சீரடைந்தவுடன் சர்வதேச தபால் சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில், பழுதடையக்கூடிய பொருட்களை அனுப்புவதில் அபாயம் காணப்படுவதால் அவை சேதமடையும் வாய்ப்பு உள்ளதாகவும் தபால்மா அதிபர் வலியுறுத்தினார்.
எனவே, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்புவதில் பொதுமக்கள் அவதானம் கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இச்சிரமங்கள் இலங்கைக்கு மட்டும் அல்லாது பல நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.