மக்களின் காணிகள் விடுவிப்பு நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் – ஆளுநர் கோரிக்கை.!
வனவளத் திணைக்களமும் வனஉயிரிகள் திணைக்களமும் மக்களிடமிருந்து கையகப்படுத்தியுள்ள வாழ்விடக் காணிகளையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சுற்றுச்சூழல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பதபெந்தியின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் வரவேற்புரையாற்றிய பின்னர் உரையாற்றிய ஆளுநர், தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் வடக்கு மாகாணத்தை நோக்கி பல முதலீட்டாளர்கள் வருகை தருவதாகவும், எனினும் அவர்கள் தேவையான அனுமதிகளைப் பெறுவதில் பல நிர்வாகத் தடைகள் மற்றும்நிர்வாகத் தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டார். அனுமதி வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தாவிட்டால் முதலீட்டாளர்கள் விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படலாம் என அவர் எச்சரித்தார்.
மேலும் உரையாற்றிய ஆளுநர், சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் வனவளத் திணைக்களமும் வனஉயிரிகள் திணைக்களமும் வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார். போர்க்காலத்தில் மக்கள் இடம்பெயர்ந்திருந்த காலப்பகுதியில், உரிய கள ஆய்வுகள் மற்றும் மக்கள் கலந்துரையாடல்கள் இன்றி வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் பல காணிகள் கையகப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தி, மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் விரைவில் மீள வழங்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.