புதுடெல்லி செயலமர்வை நிறைவு செய்து நாடு திரும்பிய தமிழரசின் பிரதிநிதிகள்…!
இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைநகர் புதுடெல்லியில் பெப்ரவரி 23 முதல் 27 வரை “அமைப்பின் வளர்ச்சி மற்றும் மேன்மையை முன்னெடுக்கும் புதுமைத்திறன் கொண்ட தலைமைத்துவம்” தொடர்பான சர்வதேச பயிற்சித் திட்டம் நடைபெற்றது.
இச்செயலமர்வு இந்திய அரசின் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சிறுதொழில் அபிவிருத்தி நிறுவனம் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இலங்கையிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சமூக மற்றும் நிர்வாகத் துறைகளில் ஈடுபட்ட 24 இளம் அரசியல் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வவுனியா மாவட்ட கிளை உபதலைவர் மற்றும் வடகிழக்கு வாலிபர் முன்னணியின் துணைத்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன், யாழ்ப்பாண மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ஶ்ரீதரன் புஸ்பாகர், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தயாளகுமார் கெளரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
பயிற்சியின் போது தலைமைத்துவ திறன் மேம்பாடு, புதுமை முயற்சிகள், சமூக வளர்ச்சி திட்டமிடல் மற்றும் அனுபவப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆழமான பயிற்சி வழங்கப்பட்டது. உள்ளூர் மட்டத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய அணுகுமுறைகள் தொடர்பான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
பயிற்சி நிறைவில், தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பூனம் சிங்ஹா பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.இச்செயலமர்வில் பங்கேற்ற இளம் பிரதிநிதிகள், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தனர். பயிற்சியை நிறைவு செய்த குழுவினர் கடந்த 28.02.2026 மாலை டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வழியாக கொழும்பை வந்தடைந்தனர்.