ரமழான் நோன்பு காலம்: கிழக்கில் சிற்றுண்டி விற்பனை உச்சம்.!
புனித நோன்பு காலத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு ருசிகரமான சிற்றுண்டிகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், பொதுமக்களும் அவற்றை ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டம் பகுதிகளில், முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் இவ்விற்பனை அதிகரித்துள்ளது. பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பெரியநீலாவணை உள்ளிட்ட பகுதிகளில் நோன்பு திறப்புக்கான சிற்றுண்டி விற்பனை பரவலாக நடைபெறுகிறது.
கோழி, முட்டை, மாட்டு இறைச்சி சமோசா, ரோல்ஸ், பற்றீஸ், பருப்பு வடை, இறால் வடை, உளுந்து வடை, பேஸ்டி, சுருட்டு அப்பம், வண்டப்பம், சாண்ட்விச், தயிர் வடை, மாசி வடை, கட்லட், பீசா, பர்கர் போன்ற பல்வேறு உணவுப் பொருட்கள் வெகுவாக விற்பனையாகின்றன.பெப்ரவரி 19ஆம் திகதி தொடங்கிய புனித நோன்பு காலத்தைத் தொடர்ந்து இச்சிற்றுண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. குடும்பங்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் கூட்டாக நோன்பு திறப்பதற்காக பெருமளவில் கொள்வனவு செய்வதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிற்றுண்டிகள் 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகின்றன. கண்ணாடி அலமாரிகளில் அழகாக அடுக்கி வீதியோரங்களில் விற்பனை செய்யப்படுவது மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.இந்நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் அலுவலகம் ஆலோசனையின் பேரில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொலித்தீன் பயன்பாட்டைத் தடை செய்தல், பிளாஸ்டிக் வாளிகளில் கஞ்சி வழங்குவதை நிறுத்துதல், கையுறை மற்றும் தொப்பி அணிதல் கட்டாயம், மருத்துவ சான்றிதழ் பெறுதல், உணவுத் தயாரிப்பு இடங்களைச் சுத்தமாக பராமரித்தல், ரமழான் காலத்தில் மட்டும் விற்பனை செய்பவர்கள் சுகாதார அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.இந்நடவடிக்கைகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
