கிண்ணியாவில் விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராத நடவடிக்கை.!
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகரப் பகுதியில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் இன்று விசேட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
புனித ரமலான் காலம் என்பதால் கிண்ணியா பிரதான வீதியில் பொதுமக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளன. குறுகிய அகலத்தினால் இப்பாதையில் அடிக்கடி சன நெரிசலும், நீண்ட வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. இதனை ஒழுங்குபடுத்தும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறிப்பாக, பிரதான வீதியில் வாகன நிறுத்தத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றை நாள் – இரட்டை நாள் முறையை பின்பற்றாத சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நடவடிக்கையின் காரணமாக கிண்ணியா நகரின் போக்குவரத்து நிலைமை இன்று ஓரளவுக்கு சீராகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது