மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளுக்கு இராணுவத்தினர் தடை.!
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் அமைந்துள்ள காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2ஆம் திகதி வருடாந்த திருவிழாத் திருப்பலி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்காக அரசும் இராணுவமும் அனுமதி வழங்குமாறு மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு, ஆலயத்தில் வழிபாடுகளை நடத்த அனுமதி வழங்குமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், ஆலய வளாகத்துக்குள் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த வருடத் திருவிழாத் திருப்பலி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, ஆளுநர், அமைச்சர் சந்திரசேகர் மற்றும் மாவட்டச் செயலர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.யாழ்ப்பாண மறைமாவட்டமும் ஆலயத்தில் திருவிழா நடத்த அனுமதி பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில், ஆலய வளாகத்துக்குள் வழிபாடுகளை நடத்த முடியாது என்றும், வெளிப்பகுதியில் மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், அவ்வாறு வெளியில் நடத்தும் முறைக்கு யாழ்ப்பாண ஆயர் இல்லம் மறுப்புத் தெரிவித்ததால், இறுதியாக இந்த வருடத் திருவிழா ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.