பொருளாதார மீட்சியில் முன்னைய அரசின் பங்களிப்பை மறுக்க முடியாது – ஹர்ஷ டி சில்வா.!
“நாட்டின் பொருளாதார மீட்சியில் முன்னைய அரசின் பங்களிப்பும் உள்ளது. அதை எவரும் மறுதலிக்க முடியாது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவர் வழங்கிய நேர்காணலில், தற்போதைய அரசு முன்னெடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை பாராட்டியிருந்தார். எனினும், முன்னைய அரசின் பங்களிப்பு குறித்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, இலங்கையில் பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கான அடித்தளம் கடந்த ஆட்சிக்காலத்திலேயே அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார். முன்னைய அரசின் பங்களிப்பை அங்கீகரிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும் அவர் தெரிவிக்கையில், “எழுபது வீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம் மிக விரைவாக இரண்டு வீதமாகக் குறைக்கப்பட்டது.
எதிர்மறை ஏழு வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி ஐந்து வீதமாக உயர்த்தப்பட்டது. இவை சாதாரண விடயங்களல்ல” என்றார்.
பொருளாதார மீட்சி என்பது ஒரே அரசின் சாதனையாக அல்லாது, தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாகும் என்பதை உணர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.