வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் மாநகர சபையின் ஏற்பாட்டில் அப்போது மாநகர முதல்வராக இருந்தவரின் தலைமையில் கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணிகள் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பில் ஊழல் இடம்பெற்று இருப்பதாக எதிர்க்கட்சியினர் வட மகாண ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினர்களுக்கும் கடிதம் மூலமாக தெரியப்படுத்தியதன் அடிப்படையில் இன்று அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த கால்வாய், வெள்ள நீர் குடிமனைக்குள் தேங்காது ஓடுவதற்கு ஏற்ற வகையில் அகலப்படுத்தி ஆழப்படுத்தும் எனத் தெரிவித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் குறித்த பணியின் போது ஊழல் இடம்பெற்று இருப்பதாகத் தெரிவித்து ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் உட்பட பலருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பி இருந்தனர்.
இதன் அடிப்படையில் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதாக குறித்த முறைப்பாட்டாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இன்றைய தினம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பங்குபற்றுதலோடு மாநகர சபை ஊழியர்களும் கலந்து கொண்டு குறித்த கால்வாயின் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.













