பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் – அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த சிற்றூர்தி(வேன்) ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மார்க்கண்டு ஜெயநாதன் எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக உகந்தையில் உணவு தயாரித்து கொடுத்து விட்டு வீடு திரும்பிய வேளை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சிற்றூர்தி(வேன்) ஒன்று, ஊரணி சந்திக்கு அருகில் சென்றபோது, எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகம் காரணமாக இரண்டு வாகனங்களும் நிலைதடுமாறி வீதியில் கவிழ்ந்துள்ளன.
இவ்விபத்தின் போது இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சிற்றூர்தி(வேன்) ஓட்டுநரும் முச்சக்கர வண்டி ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.
விபத்தை அடுத்து சம்பவ இடத்தில் கூடிய பிரதேச மக்கள், காயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்டு பொத்துவில் ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிற்றூர்தி(வேன்) ஓட்டுநரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தமையினால், அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கல்முனை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவ்வாறு கல்முனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே குறித்த சிற்றூர்தி(வேன்) ஓட்டுநர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொடர்ந்து பொத்துவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், விபத்துத் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














