22ஆவது திருத்தம் மூலம் நீதித்துறை சுயாதீனம் கேள்விக்குறி.!
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் (31) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் ஒழுக்காற்றுச் சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான பியல் தர்ஷன குருக்கே கலந்துகொண்டு முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பெருமளவிலான மனுக்களே, அதற்கு எதிராக எழுந்துள்ள மக்கள் எதிர்ப்பிற்குச் சிறந்த சான்றாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அவர்களது தரப்பைச் சேர்ந்த மூத்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க அவர்களே 22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொய் பிரச்சாரங்களுக்குச் சிறந்த ஆதாரமாகும் என்றும், இவ்வாறான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றங்களை விரைவாகவும் திறமையாகவும் செயல்பட வைக்க அரசாங்கம் உண்மையிலேயே விரும்பினால், தற்போது காலியாகவுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 4 நீதிபதி இடங்களையும், உயர்நீதிமன்றத்தின் 4 நீதிபதி இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்த அவர், கடந்த மாதங்களில் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்குப் பதிலாகப் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உயர்நீதிமன்றம் முழுமையான நீதிபதிகள் எண்ணிக்கையின்றி இயங்கி வருவதாகத் தெரிவித்தார்.
நீதிமன்றங்களின் திறனை அதிகரிக்க வேண்டுமாயின் நீதிமன்றக் கட்டடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், அத்துடன் மாவட்ட மற்றும் மேஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழ் நீதிமன்றங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
ஏனெனில் 95 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் கீழ் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன. மாறாக, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் மட்டும் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முடியாது என்றும், இவ்வாறு பதவிக் காலத்தை நீடிப்பது ஒரு குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கான சதி என்ற நியாயமான சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களை நடத்துவதைத் தவிர்த்து வருவதாகவும், மாகாண சபை தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மறுபுறம், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் மூலம் அரச பொறிமுறைக்குள் தங்களது கட்சி உறுப்பினர்களை நுழைத்து, உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாகத் தெரிகிறது என்றும், இது வட கொரியாவைப் போன்று ஒற்றைக் கட்சியின் சிறிய குழுவினால் நிர்வகிக்கப்படும் ஒரு அரசை உருவாக்க முனையும் ஆபத்தான பயணமாகும் என்றும் எச்சரித்தார்.
அதேபோன்று, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, அதிகாரம் மற்றும் நாட்டின் செல்வம் சில பெருநிறுவனங்களின் கைகளில் குவிக்கப்படும் ஏகபோக பொருளாதார சூழலை அரசாங்கம் உருவாக்கி வருவதாகத் தெரிவித்த அவர், சோசலிசக் கொள்கைகளைப் பேசுபவர்கள் இன்று தீவிர முதலாளித்துவத்தை நோக்கிச் சென்று சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களைப் புறக்கணித்து வருகின்றனர் என்றார்.
நீதித்துறை என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இறுதியாக இருக்கும் ஒரே தஞ்சமாகும் எனக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் நீதித்துறை சுதந்திரத்தில் கைவைக்க முயன்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு எதிராகப் பின்வாங்காது ஜனநாயக ரீதியாகப் போராடும் என்று உறுதிபடக் கூறினார்.
அரசியலமைப்பு என்பது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தங்களுக்குத் தேவையானவாறு மாற்றியமைக்கும் ஒன்றல்ல எனவும், நீதித்துறையைப் பாதிக்கும் இத்தகைய அவசர அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இறுதியாக, இந்த 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாட்டின் அனைத்துப் பிரஜைகளுடனும் சேர்ந்து தங்களும் எதிர்பார்த்திருப்பதாகச் சட்டத்தரணி பியல் தர்ஷன குருக்கே தெரிவித்துள்ளார்.