நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் – விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே சந்திப்பு.!
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் (David Pine) அவர்களுக்கும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கும் இடையிலான விசேட இருதரப்பு சந்திப்பொன்று இன்று (ஆகஸ்ட் 31) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கும் (அன்றைய சிலோன்) நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டி 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி நடத்தப்பட்டது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு 100 ஆண்டுகளை எட்டியுள்ளதை முன்னிட்டு, 2027 ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள விசேட நினைவுச் சின்ன கிரிக்கெட் தொடரை ஒழுங்கமைப்பது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டித் தொடரைக் பார்வையிடுவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரினால் அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், இலங்கையின் ரக்பி விளையாட்டு வளர்ச்சி, இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் (Youth Exchange Programmes) மற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நியூசிலாந்து அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உயர்ஸ்தானிகர் இதன்போது உறுதி அளித்தார்.


