கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!
மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கனிம வளங்களை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த சுற்றுநிருபங்களில் பல்வேறு மாற்றங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, கருங்கல், கிரவல் மற்றும் மணல் அகழ்வில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, எதிர்காலத்தில் கனிம வள அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான சிறப்புக் குழுவின் அனுமதியும் பெறப்பட வேண்டும் என புதிய நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சுற்றுநிருபம் இலக்கம் 26/1298/110/046, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் அதிகளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வீடமைப்புத் திட்டங்கள், வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு கருங்கல், கிரவல் மற்றும் மணல் போன்ற கனிம வளப் பொருட்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன.
எனினும், குறித்த கனிம வளங்களை உரிய காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதம் காரணமாக பல அபிவிருத்தித் திட்டங்கள் பின்னடைவை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு, கனிம வளங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 45 நாட்களுக்குள் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, சட்டவிரோதமான கனிம வள அகழ்வை கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றுநிருபத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான கனிம வளங்களை உரிய அனுமதிகளுடன், கட்டுப்பாட்டு விலைகளில் மற்றும் தேவையான அளவில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இந்தப் புதிய நடைமுறைகள் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனிம வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதுடன், சட்டவிரோத அகழ்வுகளைத் தடுப்பதற்கும் இந்தப் புதிய நடைமுறை உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது.

