எல்நினோ காலநிலையை எதிர்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!
எல்நினோ காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தற்போது நிலவும் எல்நினோ காலநிலையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம், குடிநீர் மற்றும் இதர நீர் தேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோக வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
இதன்போது, கடந்த சிறுபோகப் பருவத்தில் முன்ஆயத்தத்துடன் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதால் பயிர்ச்சேதம் குறைந்த அளவில் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், மக்களின் குடிநீர் மற்றும் ஏனைய நீர் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பிரதான நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டத்தின் அடிப்படையில் தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், விவசாயத்துக்கான நீரை வழங்குதல், எதிர்கால பயிர்ச்செய்கை திட்டங்கள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.