பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை; மூவர் கைது.!
கட்டுநாயக்க, ஹிரண மற்றும் ஹோமாகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருந்தொகையான கோடா மற்றும் கசிப்புடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுவத்த பகுதியில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 3,780 லீற்றர் (21 பேரல்கள்) கோடா கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிபன பகுதியில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 2,340 லீற்றர் (13 பேரல்கள்) கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஹிரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருக்கொட பகுதியில் ஹிரண பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட முற்றுகையின் போது, 67 லீற்றரும் 500 மில்லி லீற்றரும் கொண்ட 90 போத்தல் சட்டவிரோதக் கசிப்பு மற்றும் 1,110 லீற்றர் (8 பேரல்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய அருக்கொட பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.