முறையான வீதி வசதி இல்லை; மக்கள் அவதி.!
நானுஓயா பிரதேசத்திலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில், பெரகும்புர 476/B கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கெல்சி மகளிய பிரிவில் அமைந்துள்ள கெல்சி தோட்டத்தில் சுமார் 750 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களில் சுமார் 370 சிறுவர்களும், 150-க்கும் மேற்பட்ட முதியோர்களும் உள்ளனர். ஆனால் இத்தனை குடும்பங்கள் வாழும் இந்தப் பகுதியில் முறையான வீதி வசதி இல்லை.
இவ வீதியால் வாகனம் செல்ல முடியாத நிலை, மழை பெய்தால் பாதைகள் சேறும் சகதியுமாக மாறும் நிலை, மண்சரிவும் கற்கள் சரிந்து விழும் அபாயம், பள்ளி செல்லும் சிறுவர்கள் தினமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை, கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர், இயலாமையுடையோர் மற்றும் நோயாளிகள் மருத்துவ சேவையைப் பெறுவதற்கே பெரும் சிரமம் காணப்படுகிறது.
தரம் 5க்கு மேற்பட்ட மாணவர்கள் நானுஓயா – நுவரெலியா டெஸ்ட் போர்ட் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வாகனம் செல்ல முடியாத காரணத்தால், அவர்கள் தினமும் இந்த ஆபத்தான பாதையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில், அவசர நேரங்களிலும் கூட போக்குவரத்து வசதி இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
எனவே, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிகாரிகள், பிரதேச செயலகம், உள்ளூராட்சி நிர்வாகம், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த மக்களின் நீண்டகால பிரச்சினையை நேரில் பார்வையிட்டு, வாகனம் செல்லக்கூடிய முறையான வீதி வசதியை ஏற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைக்காலத்தில் ஒரு பாதை பாதிப்புக்குள்ளாவது என்பது வெறும் போக்குவரத்து பிரச்சினை அல்ல; அது ஒரு குழந்தையின் கல்வியையும், ஒரு நோயாளியின் உயிரையும், ஒரு கர்ப்பிணித் தாயின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடிய விடயம்.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேர் மேலும் மாவட்ட அபிவிருத்தி சபைத் தலைவர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச் செல்வி மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் இன்னும் இரண்டு பேர் அது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்.

