மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்.!
நுவரெலியா, பிளக்பூல் மற்றும் மகஸ்தோட்ட பகுதிகளுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற 400 சி.சி (400cc) மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் இரு பந்தய வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாநகர சபை மற்றும் கொழும்பிலுள்ள தனியார் சங்கம் என்பன இணைந்து நேற்று மற்றும் இன்று திங்கட்கிழமை (17) இப் பந்தய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
நுவரெலியா – அம்பேவளை பிரதான வீதியில் பிளக்பூல் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் இப் பந்தயம், செங்குத்தான மலைகள் மற்றும் வளைவுகள் நிறைந்த தேயிலைத் தோட்டங்களை ஊடறுத்து மகஸ்தோட்டம் வரை செல்லும் நேரக் கணிப்புப் பந்தயமாக நடத்தப்படுகின்றது.
பல போட்டியாளர்கள் பங்கேற்ற இப் பந்தயத்தின் போது, நுவரெலியா பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
