அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்.!
தனிக்கட்சி ஆட்சிமுறைமையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கிறது. எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் எமக்கு காணப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை புறக்கணித்து விட்டு அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டு அரசாங்கம் தனது சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டதன் பின்னரே ஜனாதிபதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.
தனிக்கட்சி ஆட்சிமுறைமையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கிறது. எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் எமக்கு காணப்படுகிறது. ஜனாதிபதி உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று எண்ணத் தோன்றுகிறது.
அரச அதிகாரிகள் அரசாங்கத்துக்கு ஏற்ப செயற்படாவிடின் தமது கட்சியின் உறுப்பினர்களை கிராம சேவகர்களாகவும், பிரதேச சபை செயலாளராகவும் நியமிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஜனநாயக நாட்டில் தனிக்கட்சி முறைமை ஆட்சிக்கு வந்தால் அது மறைமுக சர்வாதிகாரத்தையே உருவாக்கும்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னணியில் அரசாங்கத்தின் அரசியல் நோக்கம் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளது. நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை ஊழல்வாதிகளும், குற்றவாளிகளும் தான் விமர்சிக்கிறார்கள் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.
அவ்வாறாயின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய அமைப்பும் ஊழல்மிக்கதா, படுகொலையாளிகளா அங்கும் உள்ளார்கள்.
ஆகவே அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.