ஆற்றின் குறுக்கே புதிய பாலமொன்று கட்டப்படும் போது, படகோட்டிக்கு தற்காலிக பாதிப்பு ஏற்படுவது இயல்பே!
நீதிமன்ற நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும், மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்டு வரும் தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எந்தவித விரக்தி நிலையும் இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“மக்கள் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நல்ல முடிவுக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுவது இயல்பானதாகும்.
பழமைவாத எண்ணங்கள், தமக்கு ஏற்படும் தற்காலிக இழப்புகள், அரசியல் இலாப நோக்கங்கள் அல்லது சரியான புரிதலின்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிலர் இவ்வாறான முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும்.
ஆறு ஒன்றின் குறுக்கே புதிய பாலமொன்று கட்டப்படும் போது, அதுவரை அங்கு படகு ஓட்டி பிழைப்பு நடத்தியவருக்கு தற்காலிக பாதிப்பு ஏற்படுவது போன்ற சூழலே சமூக மாற்றங்களின் போது நிலவுகிறது” என அமைச்சர் உவமித்துக் கூறினார்.
எழும் எதிர்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் கலந்தாலோசித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றுக்கான சரியான தீர்வுகளையோ அல்லது மாற்று வழிகளையோ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அல்லது விமர்சனங்களைப் பொருட்படுத்தாது, ஜனாதிபதி மக்கள் நலனுக்காகவே உறுதியான தீர்மானங்களை எடுத்து வருகிறார்.
தேங்கிக்கிடக்கும் வழக்குகளில் இருந்து மக்களை விடுவித்து நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதும், நீதித்துறை மீதான நம்பிக்கையை அதிகரிப்பதுமே இதன் முதன்மை நோக்கமாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.