சட்டவிரோத சொத்துக் குவிப்பு; பெண் ஒருவர் கைது.!
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு சொத்துக்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேநபர் 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 14, நகலசம் வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் இச்சொத்துக்களைப் பெற்றுள்ளதாகக் பொலிஸ்மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இவ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தில் விபரங்களைச் சமர்ப்பித்ததை அடுத்து, சட்டவிரோதப் பணமாற்றத் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக அச்சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்களால் இதற்கான முடக்கக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில், ஜா-எல பகுதியில் அமைந்த 14 இலட்சம் ரூபா பெறுமதியான 8.66 பேர்ச்சஸ் காணி, 6 வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த 59 இலட்சம் ரூபாய் பணம், கொழும்பு 14 பகுதியில் அமைந்துள்ள 225 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 அறைகளைக் கொண்ட அடுக்குமாடி வீடு, அதே பகுதியில் அமைந்துள்ள 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 அறையைக் கொண்ட அடுக்குமாடி வீடு மற்றும் 200 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீடு கொண்ட காணி ஆகியன அடங்குகின்றன.
இச்சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டவை என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பெண் சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.