ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, கூரிய ஆயுதங்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் திகன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞராவார்.
தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 5,155 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 63,000 ரூபா பணம் என்பவற்றுடன் இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரைத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைத்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டபோது, அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது வீட்டில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 1,250 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 02 வாள்கள் மற்றும் ஒரு கூரிய கத்தி போன்ற பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.