தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு.!
காலி, பிட்டிகல – நியாகம, உடகங்வத்த பகுதியில் தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலில் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் காரியவசம மாஜுவான கமகே நுவன் சுரங்க டயாஸ் என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
கடந்த முதலாம் திகதி இரவு குறித்த தம்பதியினர், பிட்டிகல பிரதேசத்திலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று அங்கு சிறிது நேரம் தங்கியிருந்த பின்னர், தமது வீட்டிற்கு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற முற்பட்டபோது, இரவு சுமார் 10 மணியளவில் அவர்களை இலக்கு வைத்து அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 41 வயதுடைய அவரது மனைவி குமாரி எதித்சிங்க கொடித்துவக்கும் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அசிட் தாக்குதலில் காயமடைந்த இருவரும் முதலில் நியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கணவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட பணத் தகராறு காரணமாக இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை இருவர் பொலிஸாரின் பாதுகாப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.