யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!
யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்றையதினம் குறித்த தனியார் பேருந்து புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது. அந்த பேருந்தில் அண்ணளவாக 60 பயணிகள் இருந்துள்ளனர்.
பேருந்தானது வேலணை – அராலி சந்தியால் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதி ஆசனத்தில் சாய்ந்தபடியே மயக்கமுற்றுள்ளார்.
இதன்போது பேருந்து அவ்வாறே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் பேருந்து மெதுவாக வீதியை விட்டு ஓரமாக செல்வதை நடத்துனர் அவதானித்து விட்டு சாரதியை பார்த்தவேளை அவர் மயக்கமுற்ற விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சாதுரியமாக செயற்பட்ட நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.