சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு; சில பொலிஸ் அதிகாரிகளும் ஆதரவு.!
நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள நோர்வூட் NC தேயிலைத் தோட்டப் பிரிவிலும், கெசல்கமு ஓயாவிற்கு அருகில் உள்ள போர்ட்ரீ (Portree) தோட்டத்திலும் இரவு நேரங்களில் இடம்பெற்று வரும் பாரிய சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வினால் பாரிய சுற்றாடல் அழிவு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த (15) ஆம் திகதி இரவு NC தேயிலைத் தோட்டத்தில் தேயிலைச் செடிகளைப் பிடுங்கி, அதன் கீழ் இருந்த இரத்தினக்கல் படிமங்களை ஒரு குழுவினர் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இத் தேயிலை தோட்டத்தில் பல தேயிலை செடிகளை அகற்றி பாரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் அங்கு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் கெசல்கமு ஓயாவுக்கு அருகில் உள்ள போர்ட்ரீ தோட்டத்திலும் இரவு நேரங்களில் 200 க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த சட்டவிரோத இரத்தினக் கற்கள் அகழ்வில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்டு வரும் இரத்தினக் கற்கள் அகழ்வோருக்கு பொலிஸாரின் ஆதரவு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பண்டார ராஜநாயக்கவிடம் வினவிய போது, சந்தேகநபர்களை கைது செய்ய கடும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.
எனினும், சட்டவிரோதமாக முறையில் இரத்தினக் கற்களை அகழ்வோரை கைது செய்ய பொலிஸ் நிலையத்திலிருந்து அகழ்வு நடைபெறும் இடம் வரை காவலாளிகளை நிறுத்தியுள்ளதாகவும், நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் சில அதிகாரிகளின் ஆதரவும் இவர்களுக்குக் கிடைப்பதனால் இவர்களைக் கைது செய்வது கடினமாக உள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
விசேட நடவடிக்கை தொடர்பில் ஹட்டன் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரதீப் வீரசேகரவிடம் வினவிய போது, வலய ஊழல் தடுப்புப் பிரிவினரை (Anti-Corruption Unit) ஈடுபடுத்தி இவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சட்டவிரோத இரத்தினக் கற்கள் அகழ்வு தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் தமக்கு வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.