பனைநின்றான் பாலத்தை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டல்.!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள பாலத்தை புதிதாக அமைப்பதற்கு நேற்று(14) அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பனைநின்றான் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் 4,446,871.90 ரூபாய் பெறுமதியில் அப்பாலத்தினை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் பிரதான வீதியிலிருந்து பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த வீதியும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று கடந்த 2025.07.19ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற வன்னி மாவட் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த வீதி மற்றும் பாலத்தினைச் சீரமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
அதற்கமைய புதுக்குடியிருப்பு பிரதேசசபையூடாக குறித்த பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியின் ஒருபகுதியைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்தொடர்ச்சியாக குறித்த வீதியில் அமைந்துள்ள பனைநின்றான் பாலத்தினையும் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கு அமைவாக 4,446,871.90 ரூபாய் பெறுமதியில் பனைநின்றான் பாலத்தினை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித் பனைநின்றான் பாலத்தினை புதிதாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது நேற்று இடம்பெற்றது.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன் ஆகியோருடன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்கள், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






