மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்.!
மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், முப்படையுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை (15) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த டெங்கு பரிசோதனை விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இன்றையதினம் அரச அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்படும். அறிவித்தல்களை மீறி டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கு உடந்தையாக உள்ள உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் கடற்படை, இராணுவம், பொது சுகாதார பரிசோதகர் உள்ளடங்கிய குழுவினர் அரச அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிலையங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கு ஏதுவாக காணப்படும் இடங்கள் குறித்து கண்காணித்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.





