தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற யாருமே தங்க தாம்பாழ தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சூழலை நாமே உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இன்று (4) இடம்பெற்ற கலந்துரையாலிலேயே குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டினார்.
மேலும், “ஈ.பி.டி.பி. முன்வைத்த மாற்று கொள்கைகளே நடைமுறைச் சாத்தியமானது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
மாகாணங்களை அடிப்படையாக கொண்ட அதிகார பகிர்வை வலுப்படுத்தி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கே இந்தியாவின் அனுசரனையும் இருக்கும்.
ஆனால் தற்போது, சிலர் தமிழக தலைவர்களை சந்தித்து சர்வதேச விசாரணை, சமஸ்டி என்று சயலாப அரசியலை முன்னெடுக்கின்றனர். அவை எமது மக்களுக்கு எந்த நன்மைகளையும் பெற்றுத்தராது.
மாகாண சபையில் இருந்து ஆரம்பித்து, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இலக்கினை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
இதனை அனைத்து தமிழ் தரப்பினரும் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான உண்மைகளும், எமது அரசியல் வேலைத் திட்டங்களும் சரியான முறையில் மக்கள் மத்தியில் எடுத்தச் செல்லப்படாமையும் எமது அரசியல் பின்னடைவுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
எனவே எமது அரசியல் கொள்கைகளும் வேலைத்திட்டங்களும் சாத்தியமான அனைத்து வழிமுறைகள் ஊடாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.