பத்தனை கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரல்.!
கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளை வாடகைக்கு வழங்குவதற்காக திறந்த கேள்வி (Tender) கோரப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, குறித்த கடையறைகள் தொடர்பான கள ஆய்வு நடவடிக்கை கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கள ஆய்வில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் வி. விஜேசுந்தரம், தொழில்நுட்ப அதிகாரி ஹேரத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜகருணா மற்றும் வருமானப் பரிசோதகர் சுந்தரராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடையறைகளின் தற்போதைய நிலை, பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள வசதிகள் மற்றும் எதிர்கால வருமான வாய்ப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தனை கடையறைகளுக்கான திறந்த கேள்வி விண்ணப்பங்களை இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரை கொட்டகலை பிரதேச சபை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை மாதம் 14 ஆம் திகதி காலை 10.00 மணி வரை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதே தினம் காலை 10.30 மணிக்கு டெண்டர் குழுவின் முன்னிலையில் கேள்விப்பெட்டி திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதுடன், உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த திறந்த கேள்வி நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கொட்டகலை பிரதேச சபை அழைப்பு விடுத்துள்ளது.
