உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 17 அன்று தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்ற பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவர் ஜூன் 3 முதல் ஜூன் 16 வரை நுவரெலியாவில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் உடலை ஹோட்டல் அறையிலிருந்து சந்தேகநபர் வெளியே கொண்டு செல்வதைக் காட்டும் சிசிடிவி (CCTV) காட்சிகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் விளைவாக, வலான மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், முக்கிய சந்தேக நபரையும் அவரது மனைவி மற்றும் குழந்தையையும் நேற்று (24) அதிகாலையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடையவர் எனவும், சந்தேகநபரான பெண் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கண்டி – பல்லேகலே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபர் தொப்பி, முகக்கவசம் மற்றும் போலித் தலைமுடி (Wig) அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று மாறுவேடத்தில் இருந்தார்.

பிரதான சந்தேகநபர் தன்னை ஒரு தமிழர் என காட்டிக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர், தான் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் அங்கிருந்து குருணாகல் சென்று, அங்குள்ள தமது ஏனைய இரு பிள்ளைகளையும் பார்த்த பின்னர் சரணடையவிருந்ததாகக் கூறினாலும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்லவே திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடக்கும் போது தான் திகன பகுதியிலுள்ள வீட்டில் இருந்ததாக சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேகநபரால் ஏமாற்றப்பட்ட பெண்களிடம் தன்னை சந்தேகநபரின் “மூத்த சகோதரி” என்றே அடையாளப்படுத்தியுள்ளார்.

தமது மூன்று பிள்ளைகளில் இருவரை கடந்த 21 ஆம் திகதி நாரம்மலவிலுள்ள வீட்டில் விட்டுச் சென்றதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

தான் விடுதிக்கு சென்று பாரத்த போது குறித்த பெண் உயிரை மாய்த்து கொண்டிருந்ததால் பயந்துபோய் சடலத்தை வாகனத்தில் கொண்டுவந்து விட்டதாக சந்தேகநபர் கூறினாலும், பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், அந்தப் பெண் தனக்குப் பணம் கொடுத்திருந்தாலும் அது 1.5 கோடி ரூபாய் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உதவிகளை வழங்கிய 49 வயதுடைய குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஒருவரும் நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த தினத்தன்று மாலை, சடலத்துடன் சந்தேகநபர் இந்த ஊழியரின் வீட்டிற்குச் சென்று தங்கியதுடன் சடலத்தைக் கொண்டுசெல்ல காரில் பின் தொடர்ந்ததுடன், சந்தேகநபரின் குடும்பத்தினரை மாத்தளையிலுள்ள தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த ஊழியரின் மனைவியிடமிருந்தும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

அம்பாறை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றபோதே இந்த இயன்முறை சிகிச்சையாளருடன் சந்தேகநபர் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

சந்தேகநபர் 30 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களை இலக்கு வைத்தே இந்த மோசடிகளைச் செய்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆடைக்கடை நடத்திய இவர், அங்கு வேலை செய்த பெண்ணிடமிருந்தும் 2 இலட்சம் ரூபாயைப் பெறத் திட்டமிட்டிருந்தார். பெண்களை ஏமாற்றிப் பெறும் பணத்தைக் கொண்டு இவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

சந்தேகநபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பல முந்தைய மோசடி சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

பிரதான சந்தேகநபரும், அவரது மனைவியும் மேலதிக விசாரணைக்காக தற்போது நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0