வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கமன்கெதர பகுதியில், வாலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கமன்கெதர பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரன்வத்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் யோகியான பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத கோனவில பகுதியில், சிலாபம் பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக பரல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 1,215 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மெத கோனவில பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கொட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட தொகையிலான மதுபானம் மற்றும் கோடாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.