சோமரத்ன ராஜபக்சவை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து மனித புதைகுழிகளை இனங்காண வேண்டும்!
கிருஷாந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சோமரத்ன ராஜபக்சவை, யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து எந்ததெந்த பகுதிகளில் மனித புதைகுழிகள் இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்று செம்மணி மனித புதைகுழியை பார்வையிடச் சென்றிருந்தமை குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிருஷாந்தி கொலை வழக்கில் சோமரத்தன ராஜபக்ச என்பவர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார்.
அவர் செம்மணி உள்ளிட்ட இடங்களின் பல பகுதியிகளில் பல உடலங்களை தாம் புதைத்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
அதனை அடையாளம் காட்ட தயாராகவுள்ளதாகவும் அவர் தன்னுடைய மனைவி ஊடாக கடிதத்தின் வாயிலாகவும் பல பொது வெளிகளிலும் கூறி இருக்கின்றார்.
சந்திரிக்கா பண்டார நாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்தெந்த பகுதிகளில் புதைகுழிகள் இருந்தன என்பதை அடையாளம் காண அவர் முற்படவில்லை.
இந்நிலையில் சோமரத்ன என்பர் இன்னமும் கூட தான் இடங்களை அடையாளம் காட்ட தயாராகவுள்ளதாக தற்போதும் கூறிக்கொண்டுள்ளார்.
இத்தகைய பின்னணியில் செம்மணி மாத்திரமல்லாமல் இன்னும் பல இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம் .
ஆகவே இந்த அரசாங்கம் சோமரத்ன ராஜபக்சவை யாழ்ப்பாணம் வரவழைத்து புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளம் காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.