காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!
கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு சாமிமலை ஓயாவில் கண்டுபிடித்துள்ளனர்.
55 வயதுடைய கிட்ணன் சிவபெருமான் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தேடுதல் மேற்கொண்டு வந்த வேளை சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கவரவலை தோட்ட அப்பர் குரூடன் பகுதியில் ஊடறுத்து செல்லும் சாமிமலை ஓயாவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்த பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

