இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் மே தின வாழ்த்துச் செய்தி.!
உலக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கும் இந்நன்னாளான மே தினத்தில், நாட்டின் அபிவிருத்திக்காக இரவு பகலின்றி உழைக்கும் அனைத்து தொழிலாளர் சகோதரர், சகோதரிகளுக்கும் எமது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ் வாழ்த்துச் செய்தி, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றிய தலைமை பீட குருமார்கள், ரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, பதுளை, கண்டி, மாத்தளை மாவட்ட கிளை ஒன்றிய குருமார்கள் அனைவரின் சார்பாக அன்புடன் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றென்றும் பாராட்டத்தக்கவை.
கடும் மழையையும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் உங்களின் உழைப்பிற்கு இந்நாளில் எமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதும், சமூக வசதிகள் வலுப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியமானவை. அந்த நோக்கில் அரசும் சமூக அமைப்புகளும் இணைந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.
“போதையற்ற நாடு, ஊழலற்ற தேசம்” என்ற உயரிய இலக்கை அடைவதற்கும், ஒழுக்கமிக்க மற்றும் வளமான சமூகத்தை உருவாக்குவதற்கும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.
உழைப்பாளர்களின் சக்தியே தேசத்தின் முன்னேற்றத்தின் அடித்தளம். உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, கௌரவமான வாழ்க்கை நிலை உறுதி செய்யப்படும் சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
