புளியங்குளத்தில் புகையிரதம் இயந்திரக் கோளாறு; வடக்கு மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிப்பு!
யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த புகையிரதம் ஒன்று, வவுனியா – புளியங்குளம் பகுதியில் திடீர் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புகையிரதம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக, வடக்கு மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தற்போது தாமதமடைந்துள்ளன.
இயந்திரக் கோளாறைச் சரிசெய்து, புகையிரத போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான தீவிர நடவடிக்கைகள் புகையிரத திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புகையிரத பயணத்தடை காரணமாக, அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பயணிகள் மற்றும் வடக்கு மார்க்கத்தைப் பயன்படுத்தும் ஏனைய பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இயந்திரக் கோளாறு சீர்செய்யப்பட்டவுடன் புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.