சிறைக்கைதி உயிரிழப்பு; சிறை அதிகாரிகள் ஐவர் சிக்கினர்.!
கொழும்பு, பொரளை மகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 5 சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சிறைச்சாலை வளாகத்துக்குள் இடம்பெற்ற இந்த மரணம் தொடர்பில் பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், முதற்கட்டமாக ஒரு சிறைச்சாலை அதிகாரி மற்றும் இரண்டு சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம், நேற்று மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதி ஒருவரின் மரணத்துக்குச் சிறைச்சாலை அதிகாரிகளே காரணமாக இருந்துள்ளமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பொரளை பொலிஸார், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.