சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!
சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில், நடு இரவில் ஹேமர் (Hammer) இயந்திரத்தைக் கொண்டு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிகிரியா வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிகிரியா வனவிலங்கு அலுவலகப் பிரதானியும் வனவிலங்கு கட்டுப்பாட்டாளருமான எஸ்.எஸ்.மலிந்த அவர்களுக்கு, சிகிரியா சரணாலயத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிலர் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உடனடியாகச் செயற்பட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் அப்ப பகுதிக்குச் சென்று சோதனையிட்டபோது, தேசிய நீர் வழங்கல் வாரியத்திற்குச் சொந்தமானது எனக் குறிப்பிடும் வகையில் அரசு இலச்சினை பொறிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், அப்பகுதியில் மூவர் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, தாம் தேசிய நீர் வழங்கல் வாரியத்தின் ஊழியர்கள் என்றும், அருகிலுள்ள வீட்டிற்கு நீர் இணைப்பு வழங்குவதற்காகவே தோண்டுவதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும், நள்ளிரவு வேளையில் எவ்வாறு நீர் இணைப்பு வழங்க முடியும் என்ற அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர்களால் சரியான பதிலளிக்க முடியவில்லை. இதனையடுத்து, அவர்களிடம் இருந்த பாறைகளைத் துளையிடும் ஹேமர் இயந்திரம் மற்றும் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் தம்புள்ளை நீர் வழங்கல் வாரியத்தில் பணிபுரிபவர்கள் என்றும், மற்றவர் அந்த நிலத்தின் உரிமையாளர் என்றும் வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் மலிந்த தெரிவித்தார்.
மேலும், இந்தக் குழுவினர் இதற்கு முன்னரும் வேறு ஒரு இடத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், அவர்களிடம் இருந்த ஹேமர் இயந்திரத்தின் முனை தேயும் அளவுக்கு ஏதேனும் பாறையையோ அல்லது வேறு இடத்தையோ அவர்கள் கடுமையாகத் தோண்டியிருப்பதற்கான சான்றுகள் காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், அவர்களது முச்சக்கர வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி தம்புள்ளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.