கைதி ஒருவர் உயிரிழப்பு; இருவர் கைது.!
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், நேற்று காலை சுமார் 11 மணியளவில் மெகசின் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர் அவர்களுடன் போராடியபோது மயங்கி விழுந்த ஒரு சந்தேக நபர் உயிரிழந்ததாகவும், மற்றொரு சந்தேக நபரும் சம்பந்தப்பட்ட அதிகாரியும் காயமடைந்ததாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர்களில் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
38 வயதுடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இது குறித்த விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் உயிரிழந்த சந்தேக நபரின் உறவினர்கள், சிறை அதிகாரிகளின் தாக்குதலால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.