‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு யுவதிகள் சிக்கினார்கள்!
கம்பஹா மாவட்டம், மீரிகமை பகுதியில் சட்டவிரோத ‘ஐஸ்’ போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இரண்டு யுவதிகளைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மீரிகமை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கணிசமான அளவு ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய யுவதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நீர்கொழும்பு மற்றும் கந்தானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி யுவதிகள் நீண்டகாலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்களா அல்லது இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து மீரிகமை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.