தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த காணிகள் அளவீடு செய்து காணி உரிமையாளர்களை உறுதி செய்த பின், மிகவிரைவில் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் அளவீடு செய்யப்படும்.
காணி அளவீடுகள் நிறைவடைந்ததும், உரிய ஆவணங்களின் அடிப்படையில் காணி உரிமையாளர்கள் யார் என்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படும்.
அவ்வாறு உரிமையாளர்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர், மிக விரைவான காலப்பகுதிக்குள் அந்தக் காணிகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தையிட்டியில் தனியார் காணிகளைச் சுவீகரித்து சட்டவிரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் தரப்பினர் நீண்டகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.