மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால் வலுசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும்.!
மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பதாக இருந்தால், அரசிலுள்ள 159 உறுப்பினர்களும் இந்த ஊழல் மோசடிக்கு ஆதரவாக முன்னிற்க முடியாது.
இந்த விடயத்தில் விலைமனு கோரப்பட்ட விதம் தவறானது என்பது கணக்காய்வாளர் அறிக்கையிலேயே தெளிவாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட விலைமனு மற்றும் அது சார்ந்த நடைமுறைகள் அனைத்தும் முறையற்றவை.
இது குறித்து நாம் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதும், சமூகத்தில் பேசப்பட்ட போதும் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ அதனைச் செவிமடுக்கவில்லை. தாங்கள் செய்த செயல் சரியானது என்றே அவர்கள் தொடர்ச்சியாக வாதிட்டு வந்தனர்.
ஆனால், இன்று வெளிவரும் அனைத்து உத்தியோகபூர்வ அறிக்கைகளும் இந்த மோசடி நடைபெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, அமைச்சருக்காக அரசு முன்னின்று வாதிடக்கூடாது.” – என்றார்.