செட்டிகுளம் முசல்குத்தியில் மக்களின் காணிகளில் எல்லைக்கற்கள் இட்டு வனவளத் திணைக்களம் அடாவடி.!
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முசல்குத்தி பகுதியில் வனவளத் திணைக்களத்தினால் அடாத்தாக எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள, கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (06.04.2026) நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் சகிதம் பார்வையிட்டிருந்தார்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் அண்மையில் காணி மற்றும் வனவள அமைச்சர் பங்குபற்றிய கூட்டம் ஆகியவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலைப்படுத்தியிருந்தார். அரச அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் கூட அறிவித்தல் வழங்காமல் இந்த காணிகள் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
காணிகளை பார்வையிட்ட பின்னர் கருத்துதெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பில் அரசாங்க அதிபர், வனவளத் திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் மீளவும் கலந்துரையாடுவதாக தெரிவித்தார். அத்துடன் காணி மற்றும் வனவள அமைச்சரை விரைவில் கொழும்பில் சந்தித்து இது தொடர்பில் முறையிடவுள்ளதாகவும், காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.



