பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு.!
காசல்ரி நீர்த்தேக்கத்தில் இணையும் கெசல்கமுவ ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் தோட்டத்தைச் சேர்ந்த நோர்வூட் அயர்வி தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய வாகீசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று மதியம் கெசல்கமுவ ஓயாவில் உள்ள ‘சில்வர் வாலா’ என்ற இடத்தில் தனது நண்பர்கள் சிலருடன் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட நண்பர்கள், அவரைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அதிக ஆழம் காரணமாக, அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்து, அந்த மாணவர் நீருக்கடியில் மூழ்கியுள்ளார்.
நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், நோர்வூட் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உள்ளூர் மக்களின் உதவியுடன் காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையினை நேற்று முதல் மேற்கொண்டனர்.
எனினும் நீரிழ் மூழ்கிய சிறுவனை மீட்க முடியாத நிலையில் இன்று (05) இராணுவ சுழியோடியினரை வரவழைத்து குறித்த ஆற்றுப்பகுதியில் தேடுதல் நடத்தி சுமார் 02 மணித்தியாலங்களின் பின்னர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவித்த நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை செய்து முடிந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.