பணிப்புறக்கணிப்பு அடிப்படையற்றது – சுகாதார அமைச்சர் கடும் விமர்சனம்.!
மருத்துவப் பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமன நடைமுறைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு அடிப்படையற்றது என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற கருத்துரையில், எந்தவொரு பிரச்சினையும் இருந்தால் நோயாளிகளின் உயிரை பாதிக்காமல் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணுமாறு அவர் சங்கத்துக்கு அறிவுறுத்தினார்.
“நியாயமான காரணங்களுக்காகப் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றால் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் இது விவாதிக்கத்தக்கதல்லாத ஒரு நடவடிக்கை” என அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், அமைச்சருடன் உள்ள முரண்பாடுகளை பொதுமக்கள் மீது சுமத்தக் கூடாது என்றும், சட்டவிரோதம் என கருதினால் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.
இதனிடையே, பயிற்சி வைத்தியர்கள் அரச சேவையில் இணைவதற்கான விண்ணப்ப அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அதனை நீட்டிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.காலக்கெடு கடந்த பின்னர் விண்ணப்பிப்பவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பணியாற்றவோ அல்லது சம்பளம் பெறவோ வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.