மக்களை ஏமாற்றும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடத் தயார்.!
“தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை மீறி, மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களை அரசு ஏமாற்றி வருகின்றது. இந்த அநீதிக்கு எதிராக விரைவில் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடுவோம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமது ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், தற்போது அதனை 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளனர். தற்போது மீண்டும் 12 சதவீத அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தெற்காசியாவிலேயே இலங்கையில்தான் மின்சாரக் கட்டணம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இது சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கசப்பான பரிசாகும்.
எரிபொருள் விலைச்சூத்திரத்தை முற்றாக நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, அதே சூத்திரத்தைப் பயன்படுத்தி ஒரே மாதத்தில் மூன்று முறை விலைகளை அதிகரித்துள்ளது. இன்று 1000 ரூபாவுக்கு வெறும் இரண்டு லீற்றர் பெற்றோலை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் கூட இந்தளவுக்குப் பாரிய விலை அதிகரிப்பு ஏற்படவில்லை.
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு மத்திய கிழக்கு போர்ச் சூழலைக் காரணமாகக் கூறுவது ஒரு கண்துடைப்பாகும். உண்மையில், தரமற்ற நிலக்கரியுடன் வருகை தந்துள்ள 14 கப்பல்கள் தொடர்பான பாரிய மோசடியை மூடிமறைக்கவே இந்தக் கட்டண உயர்வு பயன்படுத்தப்படுகின்றது. இந்த ஊழல் குறித்துப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரையில் மௌனம் காப்பது ஏன்?
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி உயர்ந்து வருகின்றன. அரசின் இந்த மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் வெகுவிரைவில் மக்களைத் திரட்டிப் போராட்டங்களை முன்னெடுப்போம்.” – என்றார்.