இன்று முதல் 24 மணிநேர நீர்வெட்டு.!
பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளில் இன்று முதல் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கடும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் திஸ்னா பன்னில தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாதுக்கை பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு 8.00 மணி முதல் நாளை இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும். அதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு நீர் வழங்கப்பட்டு, மீண்டும் ஏப்ரல் 07ஆம் திகதி நீர் வெட்டு அமுலாகும்.
இதேவேளை, ஹோமாகம பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை (03) இரவு 8.00 மணி முதல் ஏப்ரல் 04ஆம் திகதி இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும். இப்பகுதியில் மீண்டும் ஏப்ரல் 08ஆம் திகதி நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அதேபோல், பெலன்வத்த பகுதியில் ஏப்ரல் 04ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்பதுடன், மீண்டும் ஏப்ரல் 09ஆம் திகதி நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சுழற்சி முறையிலான இந்த நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.