அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி.!
கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்றையதினம் அதிகாலை 01.00 மணியளவில் நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
உந்துருளி விபத்தில் காயமடைந்த ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, மீண்டும் கொத்மலை – தவலந்தென்ன நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில், வேனின் உரிமையாளர், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மற்றும் ஒரு விற்பனை உதவியாளர் என மொத்தம் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இடம்பெற்றவுடன் வேன் உரிமையாளரின் மகன், பிரதான வீதிக்கு வந்து அந்த வழியாகச் சென்ற ஒரு கெப் ரக வாகனத்தை நிறுத்தி உதவி கோரியுள்ளார்.
பின்னர் கொத்மலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, இதற்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்துக்குள்ளான மற்றும் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளதாகக் கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.