பூவரசங்குளம் மக்களின் காணி பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை – சத்தியலிங்கம் உறுதி.!
வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் மற்றும் அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் குறைகேள் சந்திப்பில் ஈடுபட்டார்.பூவரசங்குளம் ஸ்ரீ முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வட்டார பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா ரவீந்திரனும் கலந்து கொண்டார்.
இதன்போது பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், குறிப்பாக வனவள திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் மக்களின் காணிகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்த விடயங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்த அவர், அரசாங்க அதிபர், வனவள திணைக்களம்மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.