நெருக்கடியில் மக்களை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் தெரிவிப்பு.!
நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளிலிருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கே உரியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் கூறியதாவது, நாளுக்கு நாள் மக்களின் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதுடன், எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சிறுவர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட ஆபத்தான நிலையில் உள்ள தரப்பினருக்காக யூனிசெப் அமைப்புடன் இணைந்து விசேட நலன்புரித் திட்டம் ஒன்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், விவசாயத் துறையில் நிலவும் உரம், விதைகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உடன் கலந்தாலோசித்து விவசாயத்தை மீளக் கட்டியெழுப்ப தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மீனவர்கள், தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து பொருளாதாரத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விரிவான தேசிய நலன்புரித் திட்டம் அவசியம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அத்துடன், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த அவசர தீர்வுகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.