மூடப்பட்டுள்ள உடப்புஸ்ஸல்லாவ கம்பஹா தோட்டத் தொழிற்சாலையை திறக்குமாறு இ.தொ.கா கோரிக்கை.!
மூடப்பட்டுள்ள உடப்புஸ்ஸல்லாவ கம்பஹா தோட்டத் தொழிற்சாலையை திறக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி சம்மந்தமாக இ.தொ.காவின் பொதுச் செயாலாளர் ஜீவன் தொண்டமான் பா.உ அவர்களின் பரிந்துரைக்கு அமைய இ.தொ.கா நுவரெலியா மாநில இயக்குனர் எஸ்.கோவிந்தராஜ் இது தொடர்பாக தோட்ட நிர்வாகி மற்றும் கேகாலை பிளான்டேசன் லிமிடெட் பிரதி பொது முகாமையாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி உள்ளார்.
இக் கலந்துரையாடலில் இத் தோட்டத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இத் தொழிற்சாலையில் வேலை செய்த சுமார் 40 தொழிலாளர்கள் மலையில் வழமையான வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தொழிற்சாலையில் வேலை செய்யும் போது ஈட்டிய வருமானத்தை இழந்துள்ளனர்.
அத்துடன் இத் தொழிற்சாலையில் தேவையான நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இதற்கு பல மில்லியன்
ரூபா கம்பனியால் செலவிடப்பட்டு இப்போது மூடப்பட்டுள்ளது. பூர்வீகமாக ஒரு கேந்திர நிலையமாக உள்ள இதனை மூடுவது பல்வேறு வகையில் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் இவ்வாறு மூடுவதை தொழிற்சங்க ரீதியில் வன்மையாக கண்டிப்பதாகவும் இதை மீண்டும் திறக்குமாறும் கோரிக்கையினை கோவிந்தராஜ் விடுத்துள்ளார்.
இவருடைய கோரிக்கையை ஏற்ற நிர்வாகமும், கேகாலை பிளான்டேசன் லிமிடெட் பொது முகாமையாளர் ஆகியோர் தற்போதுள்ள வறட்சியால் தேயிலை தூள் விலை வீழ்ச்சியின் காரணமே இத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்ற உத்தரவாதம் கடிதம் மூலம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
