வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 1 கோடியே 77 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இரு வெளிநாட்டு பயணிகளை சுங்க அதிகாரிகள் இன்று புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிரீன் செனல் ஊடாக கடத்திச் செல்ல முயன்ற போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 36 மற்றும் 37 வயதுடைய சீன நாட்டவர்கள் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இலங்கைக்கான தமது முதல் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள் இன்று புதன்கிழமை (01) அதிகாலை 12.20 மணியளவில் தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து, தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 05 பயணப் பொதிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட நான்கு வகை 590 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மொத்தம் 118,000 சிகரெட்டுகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.