லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர விடுவிப்பு – கம்பஹா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு.!
சந்தருவன் சேனாதீர மீது நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கிலிருந்து விடுவிக்க கம்பஹா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையும் நீக்கப்பட்டுள்ளது.சுமார் 16 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்து வந்த அவர், கடந்த மார்ச் 11, 2026 அன்று இலங்கை திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு சர்வதேச பொலிஸார் மூலம் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றது.எனினும், நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த வழக்கில் சந்தருவன் சேனாதீர தொடர்புடையவர் அல்லர் எனகுற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து, அனைத்து குற்றச்சாட்டுகளும் தள்ளுபடி செய்யப்பட்டு அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தல்களால் அவர் வெளிநாடு சென்றிருந்ததுடன், 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் இலங்கை திரும்பியமை குறிப்பிடத்தக்கது.